ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதி!!

ஐதராபாத் : ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சினிமா படப்பிடிப்பிற்காக ஹைதராபாதில் கடந்த 10 நாட்ளாக நடிகர் ரஜினிகாந்த் தங்கி இருந்தார். சில தினங்களுக்கு முன்னதாக படப்பிடிப்பில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சில நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ரஜினிகாந்திற்கு கொரோனா தொற்று இல்லை என்பதும் தெரியவந்தது. இருப்பினும் நடிகர் ரஜினிகாந்த் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும் அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு கொரோனா அறிகுறி எதுவும் இல்லாத போதிலும்,  ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக இன்று காலை ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்தம் சீராகும் வரை அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பார். ரத்த அழுத்த மாறுபாட்டை தவிர வேறு எந்த பிரச்னையும் ரஜினிகாந்திற்கு இல்லை. ரத்தம் ஓட்டம், இதயத் துடிப்பு ரஜினிகாந்திற்கு சீராக உள்ளது. இருப்பினும் ரத்த அழுத்தம் சீரானவுடன் ரஜினிகாந்த் அப்போலோவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: