தென்காசி: தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே மணல் கடத்தலை தடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் ஆணைக்குளம் என்ற கிராமத்தில் அம்மன் குளம் என்ற பகுதியில் உள்ள ஓடையில் அனுமதியின்றி தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் விஏஓ எல்லபாண்டியன், உதவியாளர் ஜேம்ஸ் மற்றும் வருவாய் அலுவலர் மாரியப்பன் ஆகிய 3 பேர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அச்சமயம் அப்பகுதியில் 3 பேர் கொண்ட கும்பல் சட்டவிரோதமாக மணல் எடுத்துள்ளனர். இதனை தடுக்க முயன்றபோது அம்மூவரும் சேர்ந்து விஏஓ மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்ததின் பேரில் வழக்குப்பதிவு செய்து 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.