காத்மாண்டு: நேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் இரு தலைவர்களான பிரதமர் கே.பி.சர்மா ஒலி மற்றும் முன்னாள் பிரதமர் பிரசண்டா இடையே அதிகார மோதல் நிலவி வந்தது. இதற்கிடையே, சமீபத்தில் ஒலி நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை முன்கூட்டியே நடத்த ஜனாதிபதியிடம் பரிந்துரைத்தார். அதை ஏற்ற ஜனாதிபதி, அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் தேர்தல் நடத்த உத்தரவிட்டார்.
இதற்கு, ஆளும் கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியது. பிரசண்டா தரப்பு முழுமையாக கட்சியை தங்கள் வசப்படுத்தி வருகிறது. முதற்கட்டமாக கட்சி தலைவர் பதவியிலிருந்து சர்மா ஒலி அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மாதவ் குமார் நேபாளை புதிய தலைவராக கட்சியின் மத்திய குழு நியமித்தது.
இதைத் தொடர்ந்து, கட்சியின் நாடாளுமன்ற தலைவராக புஷ்ப கமல் பிரசண்டா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான உத்தரவை திரும்பப் பெறக் கோரி தொடரப்பட்டுள்ள மனுக்கள் நேபாள உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.