சிக்கமகளூரு: சிக்கமகளூருவில் தத்த ஜெயந்தி விழாவையொட்டி பாபாபுடன்கிரி உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் பகாதி கவுதம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் பகாதி கவுதம் கூறும்போது; சிக்கமகளூருவில் 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை தத்த ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த விழாவையொட்டி பொது கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த மாவட்ட கலெக்டர் பகாதி கவுதம் அனுமதி வழங்கியுள்ளார். அதன்படி 27ம் தேதி இரவு பாபாபுடன்கிரியில் சிறப்பு சாமி தரிசனம் நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். 28ம் தேதி பிரமாண்ட ஊர்வலம் நடைபெறுகிறது. 29ம் தேதி தத்த பாத தரிசனம் செய்ய பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறுவதுபோன்று இல்லாமல் இந்த ஆண்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாட்டுடன் விழா நடைபெறுகிறது.