சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் வழித்தடத்தில் வரும் ஜனவரி மாதம் முதல் மெட்ரோ ரயிலை இயக்க முடிவு செய்துள்ள மெட்ரோ ரயில் நிறுவனம் நாளை முதல் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை மற்றும் பரங்கிமலை முதல் சென்னை ரயில் நிலையம் வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் நீட்டிப்பு திட்டத்தில் வண்ணாரப்பேட்டை முதல் திருவெற்றியூர் விம்கோ நகர் இடையே 3770 கோடி ரூபாய் செலவில் 9 கிலோ மீட்டர் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் மெட்ரோ நிலைய கட்டுமான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. சிக்னல்கள் மற்றும் மின்மயமாக்கும் பணிகள் நடந்து வருகிறது.