அமெரிக்க அரசு மீதான சைபர் தாக்குதலுக்கு ரஷ்யா காரணமில்லை; சீனாவின் நாச வேலையே காரணம்!: அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்கு..!!

வாஷிங்டன்: அமெரிக்க அரசு மீதான சைபர் தாக்குதலுக்கு சீனாவே காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்க அரசின் முக்கிய துறைகளையும் பல தனியார் நிறுவனங்களையும் குறிவைத்து பல மாதங்களாக சைபர் தாக்குதல் நடைபெற்று வந்ததை அமெரிக்க அதிகாரிகள் அண்மையில் கண்டுபிடித்தனர். இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகளும், தனியார் நிறுவனங்களும் சந்தேகம் தெரிவித்தது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியாவும், அமெரிக்க அரசு மீதான சைபர் தாக்குதலுக்கு ரஷ்யா தான் காரணம் என கூறினார். இந்நிலையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் இதற்கு முரணான கருத்தை தெரிவித்துள்ளார்.

அதாவது அமெரிக்க அரசு மீதான சைபர் தாக்குதலுக்கு ரஷ்யா காரணமில்லை; சீனா தான் காரணம் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.  இதுகுறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அதிபர் டிரம்ப், சைபர் தாக்குதலின் பாதிப்புகள் உண்மையில் இருப்பதைவிட போலி ஊடகங்களில் மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளன. இது பற்றி எனக்கு முழுமையாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எல்லாமே கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த நாச வேலையில் ஈடுபட்டது சீனாவாக இருக்கலாம். ரஷ்யா இல்லை. சீனாவின் பங்கு பற்றி விவாதிப்பதற்கு ஊடகங்கள் பயப்படுகின்றன என குறிப்பிட்டார்.

Related Stories: