மழை தண்ணீரில் மூழ்கிய மிளகாய் செடிகள்: கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள மிளகாய் செடிகள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகமான மிளகாய் சாகுபடி செய்வது ராமநாதபுரம் மாவட்டத்தில் தான். கூடுதல் மிளகாய் சாகுபடி செய்யும் பகுதி ஆர்.எஸ்.மங்கலம் பகுதியாகும். இங்கு விளைச்சல் ஆகக்கூடிய மிளகாய் வத்தல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்கின்றது. இங்கு விளையும் மிளகாய் மிகவும் தரமாக இருக்கும் என்பதால் மதுரை, விருதுநகர், சாத்தூர், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி‘,கரூர் உள்ளிட்ட பல பகுதிகளிருந்தும் வியாபாரிகள் வாங்கி செல்வது வழக்கமாக உள்ளது.

இதற்கான வாரம் ஒருமுறை சனிக்கிழமை தோறும் சந்தை நடைபெறும். ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் மழையால் இங்கு பயிரிடப்பட்டுள்ள மிளகாய் செடிகள் தண்ணீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளது. ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக கூடுதலாக விவசாயிகள் மிளகாயை சாகுபடி செய்கின்றனர். குறிப்பாக இரட்டையூரணி, புல்லமடை, வல்லமடை, ராமநாதமடை, சவேரியார்பட்டினம், செங்குடி, பூலாங்குடி, வாணியக்குடி, சீனாங்குடி, வண்டல், வரவணி, சேத்திடல் உள்ளிட்ட ஆர்.எஸ்.மங்கலம் சுற்றுப்புற பகுதிகளில் நடப்பு ஆண்டில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மிளகாய் செடிகள் நன்றாக வளர்ச்சியடைந்துள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் பெய்து வரும் கண மழையால், மிளகாய் வயல்களில் தண்ணீர் தேங்கி மிளகாய் செடிகள் மூழ்கியுள்ளன.

இதனால் தண்ணீரில் மூழ்கிய மிளகாய் செடிகள் பெரும்பாலான வயல்களில் அழுகி வருகின்றன. இதனால் பல ஆயிரங்களை கடன் வாங்கி செலவு செய்து மிளகாய் சாகுபடி செய்துள்ள நிலையில், மழையால் மிளகாய் செடிகள் பாதிப்படைந்துள்ளதால் விவசாயிகள் மிகுந்த வேதனையுடன் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மிளகாய் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: