திருத்துறைப்பூண்டி அருகே சாலை வசதி இல்லாததால் சுடுகாட்டுக்கு சேறும், சகதியுமான வழியில் இறந்தவர் உடலை சுமந்து செல்லும் அவலம்

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னூர் ஊராட்சி தோளாச்சேரியில் உள்ள 8,9வது வார்டு பகுதியில் 200க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு யாரும் இறந்தால் ரயில்வே கேட் அருகே  அடப்பாறுகரையில் 2கிமீ தூரம் உள்ள சுடு காட்டில் அடக்கம் செய்ய வேண்டும். இதற்கு சாலை வசதி கிடையாது. இந்நிலையில் நேற்று தோளாச்சேரி நடுத்தெருவை சேர்ந்த ராஜராமன் மனைவி முத்துலட்சுமி(45) உடல்நலக்குறைவால்  இறந்தார்.

இறந்த உடலை சுடுகாட்டுக்கு எடுத்து சாலை வசதி இல்லாத நிலையில் நேற்று மாலை கொட்டும் மழையில் அவரது உடலை உறவினர்கள் சேறும் சகதியுமான வழியில் சுமந்து சென்று சென்று சுடுகாட்டில் இறுதிச்சடங்கு  நடத்தப்பட்டுஅவரது உடல் எரியூட்டப்பட்டது. இதுகுறித்து முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் செங்குட்டுவன் கூறுகையில், கடந்த 30 ஆண்டுகளாக சுடுகாட்டுக்கு சாலை வசதி கிடையாது.சாலை வசதி கேட்டு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கையில்லை எனவே மழை காலம்  முடிந்ததும் சுடுகாட்டுக்கு சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: