தங்கவயல்: தங்கவயல் ஆண்டர்சன்பேட்டையின் முக்கிய சாலையில் கழிவு நீர் கால்வாய் திறந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. தங்கவயல் நகரமன்றம் சார்பில் பல வருடங்களுக்கு முன்பாகவே நகரின் முக்கிய வணிக பகுதியான ராபர்ட்சன்பேட்டையில் உள்ள முக்கிய சாலைகளின் இருபுறமும் சிமெண்ட் பலகைகளிலான நடைபாதை அமைக்கப்பட்டது. அத்துடன் பாதுகாப்பாக இரும்பு கிராதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நிறைந்த சாலைகளில் நடைபாதையில் நடந்து செல்லும் பொதுமக்கள் வசதியாகவும், பாதுகாப்பாகவும் செல்கின்றனர். ஆனால் நகரின் மற்றொரு முக்கிய வணிக பகுதியாக உள்ள ஆண்டர்சன்பேட்டையோ பல வருடங்கள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. இதில் ஆண்டர்சன்பேட்டை பஸ் நிலையத்தில் இருந்து சாம்பியன் ரயில் நிலையம் வரை செல்லும் முக்கிய சாலையின் இருபுறமும், கரடு முரடான கல் பலகைகள் அமைந்த சமதளம் அற்ற நடைபாதை பல வருடங்களாக சீர் குலைந்த நிலையில் இருந்தது. இதனால் பொதுமக்கள், குறிப்பாக முதியவர்கள் மிகவும் சிரமத்துடனே கடந்து சென்றனர்.