சம்மனை ரத்து செய்யக்கோரிய வழக்கு திவாரி, வீஜேந்தர் மனு மீது இன்று தீர்ப்பு?

புதுடெல்லி: துணை முதல்வர் சிசோடியா தாக்கல் செய்த அவதூறு வழக்கில், சம்மனை ரத்து செய்யக் கோரி பாஜக எம்.பி. மனோஜ் திவாரி மற்றும் எம்எல்ஏ வீஜேந்தர் குப்தா ஆகியோர் தாக்கல் செய்த மனு மீது இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. டெல்லி அரசு பள்ளிகளுக்கு வகுப்பறைகள் கட்டியதில் ஊழல் நடைபெற்றதாக பாஜ கட்சியை சேர்ந்த மனோஜ் திவாரி மற்றும் வீஜேந்தர் குப்தா உள்ளிட்ட பாஜ தலைவர்கள், துணை முதல்வர் சிசோடியாவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி பேட்டியளித்தனர். இதன் காரணமாக, இவர்களுக்கு எதிராக மணிஷ் சிசோடியா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

குறிப்பாக, பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனோஜ் திவாரி, ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் மற்றும் பர்வேஷ் வர்மா, எம்எல்ஏக்கள் மஞ்சிந்தர் சிங் சிர்சா மற்றும் விஜேந்தர் குப்தா மற்றும் பாஜக செய்தித் தொடர்பாளர் ஹரிஷ் குரானா ஆகியோருக்கு எதிராக இந்த அவதூறு வழக்கை சிசோடியா தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த கீழ் நீதிமன்றம், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக்கோரி கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி பாஜ தலைவர்களுக்கு சம்மன் அனுப்பியது.

இந்நிலையில், இந்த சம்மனை ரத்து செய்து உத்தரவிடக்கோரி மனோஜ் திவாரி மற்றும் பாஜ எம்எல்ஏ வீஜேந்தர் குப்தா உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி அனு மல்கோத்ரா முன்பு விசாரணைகள் நடைபெற்று வந்தது. இரு தரப்பு வாதங்கள் மற்றும் அரசு தரப்பு வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடபடாமல் ஒத்தி வைத்து கடந்த டிசம்பர் 7ம் தேதியன்று உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடபடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

Related Stories: