வெலிங்டன்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட மகளிர் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான புதிய அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. போட்டிகள் 2022 மார்ச் 4ம் தேதி முதல் ஏப்.3ம் தேதி வரை நியூசிலாந்தின் 6 நகரங்களில் நடைபெறும்.
இத்தொடர் ஏற்கனவே 2021 மார்ச் மாதம் நியூசிலாந்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததுடன், போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் தீவிரமானதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த ஆண்களுக்கான டி20 உலக கோப்பை தள்ளிவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மகளி உலக கோப்பை ஒருநாள் போட்டியும் 2022க்கு தள்ளி வைக்கப்படுவதாக ஐசிசி அறிவித்தது.இந்நிலையில், இத்தொடருக்கான புதிய அட்டவணையை ஐசிசி நேற்று வெளியிட்டது. அதன்படி 2022, மார்ச் 4ம் தேதி நியூசிலாந்தின் தவுரங்கா நகரில் தொடக்க போட்டியும், ஏப்.3ம் தேதி கிறைஸ்ட்சர்ச் நகரில் பைனலும் நடக்க உள்ளன. மொத்தம் 31 போட்டிகள். நியூசிலாந்தின் தவுரங்கா, ஆக்லாந்து, வெலிங்டன், கிறைஸ்ட்சர்ச், ஹாமில்டன், டுனடின் என 6 நகரங்களில் நடைபெறும். இறுதிப்போட்டி உட்பட பல போட்டிகள் பகலிரவு ஆட்டமாக இருக்கும்.