பெங்களூரு: கர்நாடக சட்டமன்றத்தில் பசுவதை தடுப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். சட்டப்பேரவை மேலவை இருக்கையில் இருந்து துணை சபாநாயகர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதால் சட்டப்பேரவையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டிருக்கிறது. கர்நாடகாவில் பசுவதை தடுப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த பாஜக அரசு மும்முரமாக முனைப்பு காட்டி வந்தது. கடந்த வாரம் கர்நாடக சட்டமன்றத்தில் கீழவையில் பசுவதை தடுப்பு சட்டத்தை கர்நாடக அரசு நிறைவேற்றியது. மேலவையில் பசுவதை தடுப்பு சட்டம் இதுவரை நிறைவேறாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இன்று மேலவையில் பசுவதை தடுப்பு சட்டத்தை இயற்ற பாஜக அரசு, சிறப்பு அனுமதி பெற்று கூட்டியது. மேலவையில் கூட்டம் தொடங்கியவுடன் பாஜக மேலவை உறுப்பினர்கள் அனைவரும் மேலவை சபாநாயகரான கே.பிரதபச்சந்திர ஷெட்டிக்கு (காங்கிரஸ்) எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர்.