பஸ் நிலையத்திற்கு பெயர் வைப்பதில் மோதல் சாத்தை அருகே மணி ஒலித்து தேவாலயத்தில் திரண்ட மக்கள்

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே பஸ் நிலையத்திற்கு பெயர் சூட்டுவதில் இரு கிராம மக்களிடையே ஏற்பட்ட பிரச்னையில் ஒருதரப்பினர் தேவாலயத்தில் மணி ஒலித்து மறியலுக்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் நள்ளிரவு வரை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இன்றும் பேச்சுவார்த்தை தொடர்கிறது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கீழ்புறத்தில் ெகாழுந்தட்டு கிராமம். அமைந்துள்ளது. இதுபோல் கொழுந்தட்டு-தட்டார்மடம் சாலை மேல்புறத்தில் போலையார்புரம் அமைந்துள்ளது. இரு கிராமங்களிலும் சிஎஸ்.ஐ. மற்றும் ஆர்சி கிறிஸ்தவ மக்கள் வசித்து வருகின்றனர். இதனிடையே கடந்த 4 ஆண்டுக்குமுன் போலையார்புரத்தில் பாழடைந்த இடத்தை சீரமைத்து பஸ்நிறுத்தம் அமைக்கப்பட்டது. பஸ் நிறுத்தத்திற்கு தங்கள் ஊர் பெயர் வைக்குமாறு இரு கிராம மக்களும் கூறியதால் அப்போதைய கலெக்டர், பஸ் நிறுத்தத்திற்கு ஊர் பெயர் வைக்க தடை விதித்தார்.

இந்நிலையில்  புதுப்பித்து அமைக்கப்பட்ட பஸ் நிறுத்தத்திற்கு போலையர்புரம் கிராம மக்கள், காமராஜர் பஸ் நிறுத்தம் என தற்போது போர்டு வைத்துள்ளனர். இதற்கு கொழுந்தட்டு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து நேற்றிரவு 7 மணி அளவில் அங்குள்ள சவேரியார்புரம் தேவாலயத்தில் ஆலயமணி ஒலித்து கிராம மக்கள், தேவாலயம் முன் திரண்டு மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஜான்சன் ஜெபதாஸ், தாசில்தார் லட்சுமி கணேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தூர்ராஜன், விஏஓ சத்தியராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மறியலில் ஈடுபட முயன்ற கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபோல் எதிர்தரப்பை சேர்ந்த போலையார்புரம் கிராம மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நீதிமன்ற அனுமதியின்பேரில் பஸ் நிறுத்தத்திற்கு பெயர் சூட்டப் பட்டதாக போலையார்புரம் மக்கள் தெரிவித்தனர்.

ஆனால் இதனை ஏற்க மறுத்ததுடன் பஸ் நிறுத்தத்திற்கு எதிர்புறம் கொழுந்தட்டு கிராமம் என டிஜிட்டல் போர்டு வைத்தனர். பஸ் நிறுத்தத்திற்கு பெயர் சூட்டுவது தொடர்பாக அதிகாரிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் நள்ளிரவு வரை நீடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே பஸ் நிறுத்தத்திற்கு பெயர் சூட்டல் பிரச்னை தொடர்பாக  சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் இன்று தாசில்தார் லட்சுமி கணேஷ் தலைமையில் சமாதான பேச்சு வார்த்தை நடக்கிறது. இதில் பிடிஓக்கள் சுப்பிரமணியன், பாண்டியன் மற்றும் அதிகாரிகள், கிராம மக்கள் கலந்து கொள்கின்றனர்.

Related Stories: