முதல்வராக தொடர்ந்து எடியூரப்பாவே நீடிப்பார்: அமைச்சர் அசோக் உறுதி

மைசூரு: மாநில முதல்வராக எடியூரப்பா தொடர்ந்து நீடிப்பார். எந்த தவறும் செய்யாத அவரை நீக்குவது சரியில்லை என்பது என்னுடைய கருத்து என்று அமைச்சர் ஆர். அசோக் தெரிவித்தார்.   இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  மாநில முதல்வராக தற்போது எடியூரப்பா இருந்து வருகிறார். கட்சி மேலிட தலைவர்கள் அவர் முதல்வராக இருக்க வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். இதனால் மீதமுள்ள இரண்டரை ஆண்டும் அவரே முதல்வர் பதவியில் நீடிப்பார். எந்த தவறும் செய்யாத அவரை நீக்குவது சரியில்லை என்பது என்னுடைய கருத்து. முதல்வர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் சந்தோஷ் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவத்தை காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் அரசியலாக்கி வருகிறார். இடைத்தேர்தல் தோல்விக்கு பின் சிவகுமார் நிதானத்தை இழந்துள்ளார்.

இதனால் ஆதாரமில்லாத குற்றசாட்டுகள் தெரிவித்து வருகிறார். மாநிலத்தில் பா.ஜ. அரசு அமைவதற்கு முனிரத்னம், எம்.டி.பி.நாகராஜ், சங்கர் உட்பட பலர் செய்த தியாகம் தான் காரணம். இதனால் அவர்களை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அமைச்சர் பதவி வழங்க கட்சி மேலிடம் அனுமதி வேண்டும். அவர்களின் முடிவுக்காக நாங்கள் இருக்கிறோம் என்றார்.

Related Stories: