மதுரை: சிறைகளில் மனநல சிகிச்சை குழுவை அமைக்க கோரி, மதுரை, சின்னசொக்கிகுளத்தைச் சேர்ந்த ராஜா தாக்கல் செய்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: உலகிலேயே அதிக மன அழுத்தம் உள்ளவர்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. நம் நாட்டில் 7.5 சதவீதம் பேர் மன அழுத்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 7 பேரில் ஒருவருக்கு பாதிப்பு உள்ளது. தற்கொலை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு அடிப்படையாக மன அழுத்தம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மனஅழுத்தம் சார்ந்த பாதிப்புகள் இருமடங்காகியுள்ளது. 150 மில்லியன் இந்தியர்கள் மனம் சார்ந்த நோய் பாதிப்புக்கும், 13 முதல் 17 வயதுள்ள பருவ வயதினர் 9.8 மில்லியன் பேர் மன அழுத்தம் மற்றும் மனநிலை சார்ந்த பிரச்னைகளுக்கும் ஆளாகியுள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.