திருவனந்தபுரம்: சபரிமலையில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 39-ஆக உயர்ந்துள்ளது. மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோயில் நவ.16-ம் தேதி திறக்கப்பட்டது. கோயிலுக்கு வருவோர் கொரோனா பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள், காவலர்கள், கோயில் நிர்வாகிகளுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் கடுமையான பரிசோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுவார்கள் என கேரள அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடும் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் பக்தர்கள் வர வேண்டும். மேலும், சான்றிதழ் இல்லாத பக்தர்களுக்கு நிலக்கல்லில் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்த பரிசோதனை கேரள பக்தர்களுக்கு இலவசமாகவும், மற்ற மாநில அய்யப்ப பக்தர்களுக்கு ரூ.625 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள் உடனடியாக ரான்னியில் உள்ள கொரோனா முதல் நிலை சிகிச்சை மையத்தில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.