தர்மபுரி: தர்மபுரி அருகே, பவர்கிரிட் நிறுவனம் கையகப்படுத்திய நிலத்திற்கு கூடுதல் இழப்பீடு தொகை கேட்டு, கலெக்டர் அலுவலகத்தில் கர்ப்பிணி மனைவியுடன் வந்த விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தர்மபுரி மாவட்டம், இண்டூர் அருகே கோரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சின்னசாமி(35). இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. சின்னசாமியின் விவசாய நிலத்தை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, உயர் மின்பாதை அமைப்பதற்காக பவர் கிரிட் நிறுவனத்தினர் எடுத்துக் கொண்டனர். தனது நிலத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை குறைவாக இருப்பதாக கூறி, உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என, கலெக்டர் அலுவலகத்தில் சின்னசாமி பலமுறை மனு செய்தார். ஆனால், அவரது மனுவின் மீது அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தவில்லை என தெரிகிறது.