விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே உள்ள பரவளூர் ஊராட்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் இறந்தவர்களின் உடலை புதைப்பதற்காக, மணிமுக்தாற்றின் அருகில் சுடுகாடு அமைந்துள்ளது. கடந்த சில வருடங்களாக சிலர், சுடுகாடு பகுதியை முற்றிலுமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு வழியில்லாமல் மணிமுக்தாறு நதிக்கரையில் சடலத்தை புதைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதியினர் மணிமுக்தாறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தனவேல் தலைமையில் நேற்று சுடுகாடு தகன மேடை அருகே நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.