தேனி: கிலோ 2 ரூபாயாக விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் வெண்டைக்காய்களை டிராக்டரில் கொண்டு சென்று ஆற்றில் கொட்டிய சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி மாவட்டத்தில் வீரபாண்டி, பூதிப்புரம், அரைப்படிதேவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சுமார் 120 ஏக்கர் பரப்பளவில் வெண்டை விவசாயம் செய்தனர். தற்போது மழைக்காலம் என்பதால் வெண்டைக்காய் அதிக விளைச்சல் ஏற்பட்டது. ஆனால், கேரளாவில் தேவை குறைந்ததால் அதிகம் கொள்முதல் செய்யவில்லை.
எனவே விவசாயிகள் வெண்டைக்காய்களை பறித்து தேனி அருகே வீரபாண்டியில் உள்ள கமிஷன் கடைகளுக்கு கொண்டு வந்தனர். அங்கு கிலோ 2 மற்றும் 3-க்கு மட்டுமே விலை போனது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் மூட்டைகளிலேயே வெண்டைக்காய்களை தேக்கினர். அவை பழுத்து அழுகின.