12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக வேண்டும்

*திருவாரூர் கலெக்டர் அறிவுறுத்தல்

திருவாரூர் : 12ம் வகுப்பு தேர்ச்சிபெற்றுள்ள மாணவர்கள் ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக விளங்கிட வேண்டும் என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கான என் கல்லூரி கனவு விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

இதில் கலெக்டர் சாருஸ்ரீ பேசியதாவது, தமிழக முதல்வரால் 2022ம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட நான் முதல்வன் திட்டம், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான விரிவான மற்றும் பயனுள்ள வழிகாட்டுதலை வழங்குவதற்கான அர்ப்பணிப்பு முயற்சியாக வளர்ந்து வருகிறது.

இந்தத் திட்டமானது சரியான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆதரவுடன் அவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய ஏராளமான அரசுப்பள்ளி மாணவர்களின் திறனை அங்கீகரிக்கிறது. நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைத்து மாணவர்களும் தங்கள் பள்ளிக் கல்வியை முடித்தவுடன் உயர்கல்வி படிப்புகளைத் தொடர வழிவகை செய்வதற்காக அமைந்துள்ளது.

இத்திட்டத்தின் நோக்கம் மேல்நிலைப்பள்ளி படித்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர் கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும் மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போன்ற விவரங்கள் புகழ்பெற்ற வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களை கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படவுள்ளது.

இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களின் எதிர்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும். இந்த நிகழ்ச்சியின் மூலம் மாவட்டத்தில் 2024ம் ஆண்டில் மேல்நிலைப்பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரும் பல்வேறு படிப்புகளில் சேர்ந்து அனைவரும் ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக விளங்கிட வேண்டும். தமிழக முதல்வரின் கனவுத்திட்டமான நான் முதல்வன் திட்டத்தினை வெற்றி பெற செய்திட மாணவ, மாணவிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் ஆர்.டி.ஒ சண்முகநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் அமுதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: