திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தியையொட்டி பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி தேவி, பூதேவி தாயாருடன் மாட வீதிகளில் 8 மாதங்களுக்கு பின் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தியையொட்டி பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா நேற்று நடந்தது. ராமாவதாரத்தில் லட்சுமணனாகவும், கிருஷ்ணாவதாரத்தில் பலராமனாகவும், மகாவிஷ்ணுவுக்கு படுக்கையாகவும் சேவை செய்து வருகிறார் ஆதிசேஷன். எனவே தான் பிரமோற்சவத்தில் வீதி உலாவின் முதல் நாள் பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி எழுந்தருள்கிறார். இந்நிலையில், நாக சதுர்த்தியையொட்டி நேற்று வாகன மண்டபத்தில் இருந்து மலையப்ப சுவாமி தேவி பூதேவி தாயார்களுடன் பெரிய சேஷ வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.