மருத்துவ துணைத் தேர்வை விரைவாக நடத்த வேண்டும்: தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: எம்.பி.பி.எஸ் மருத்துவ மாணவர்களுக்கு நிலுவையில் இருக்கும் துணைத் தேர்வை விரைந்து நடத்த வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையத்தின் தரப்பில் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழங்கங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டு நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு தற்போது நாடு முழுவதும் கலந்தாய்வு நடந்து வருகிறது. இதையடுத்து கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வகுப்புகள் தொடங்க உள்ளது. இந்த நிலையில் தற்போது எம்.பி.பி.எஸ் படித்து வரும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு முடிவு வெளியாகிய பின்னரும், துணை தேர்வு இன்னும் நடத்தி முடிக்கப்படாமல் உள்ளது. இதில் குறிப்பாக இந்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்ட இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான பல்கலைக்கழக தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் பல்வேறு மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

   இதில் வழக்கமாக, தேர்வு முடிவுகள் ஏப்ரல், மே மாதங்களிலும், ஆகஸ்ட் மாதத்தில் துணைத் தேர்வுகளும் நடத்தப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் தற்போதைய கொரோனா பாதிப்பு காரணத்தினால் நடப்பாண்டு வழக்கமான துணை தேர்வு அட்டவணை பாதிக்கப்பட்டுள்ளது. இது இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவர்களிடையே பாடநெறி நீட்டிப்பு குறித்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த சிக்கல்களைக் கருத்தில் கொண்டு உடனடியாக எம்.பி.பி.எஸ் மருத்துவ மானவர்களுக்கான துணைத் தேர்வை நடத்த வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கையாக கடந்த சில வாரங்களாக இருந்து வருகிறது.இந்நிலையில், பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளை கண்காணிப்பதற்காக புதியதாக உருவாக்கப்பட்ட தேசிய மருத்துவ ஆணையத்தின் தரப்பில் ஒரு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில்,”மருத்துவப் படிப்புகளுக்கான துணைத் தேர்வை உடனடியாக நடத்த வேண்டும். அப்போது தான் மருத்துவம் பயின்று வரும் மாணவர்கள் அடுத்த ஆண்டு படிப்புக்கு செல்வதற்கு வாய்ப்பாக அமையும். இந்த அறிவுறுத்தல் என்பது நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக் கழங்களுக்கும் பொருந்தக்கூடிய ஒன்றாகும்,’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், கொரோனா காரணமாக எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான துணைத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போதிய தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுறுத்தல் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Stories: