திருச்சி அருகே காவிரியில் மூழ்கி பேராசிரியர், சிறுவன் பலி; 2 பேர் மாயம்

முசிறி: திருச்சி மாவட்டம் முசிறி கற்பக விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயலெட்சுமி(57). இவரது வீட்டுக்கு, ஈரோட்டை சேர்ந்த தம்பி  பன்னீர்செல்வம் (45), அவரது மகள் தெய்வப்பிரியா(24), மருமகன் கோவை தனியார் கல்லூரி பேராசிரியர் சரவணக்குமார் (31), உறவினரான கரூரை  சேர்ந்த ரகுராமனின் குழந்தைகள் ரத்தீஷ்(12), மிதுன்(8) உள்ளிட்ட 9 பேர் விருந்தினராக வந்திருந்தனர்.அனைவரும் நேற்று மதியம் முசிறி பரிசல்துறை சாலையிலுள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது திடீரென புதை மணலில் சிக்கி  சரவணக்குமார் மாயமானார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, ரத்தீஷ், மிதுன் ஆகியோரும் நீரில் அடித்து  செல்லப்பட்டனர்.

தகவலறிந்து முசிறி தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சரவணக்குமார் சடலமும், மற்றொரு  சிறுவன் சடலமும் மீட்கப்பட்டது. விசாரணையில் அவன், முசிறி கருமாரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அசோக்குமார் மகன் பார்த்திபன் (12) என்பதும், ரேஷன் கடைக்கு  செல்வதாக கூறிவிட்டு வந்து ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கியதும் தெரியவந்தது. மாயமான ரத்தீஷ், மிதுன் ஆகியோர் புதை மணலில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது. 

Related Stories: