பழநி: பழநியில் இடப்பிரச்னையில் நடந்த துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் தொடர் சிகிச்சையில் உள்ளார். துப்பாக்கியால் சுட்ட தியேட்டர் உரிமையாளர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம், பழநி டவுன், அப்பர் தெருவில் 12 சென்ட் காலியிடத்தை சுமார் 20 வருடங்களுக்கு முன்பு, பழநி அருகே அக்கரைப்பட்டியை சேர்ந்த இளங்கோவன் (58) வாங்கியதாக கூறப்படுகிறது. இதே இடத்தை அப்பகுதியில் வசித்து வரும் தியேட்டர் உரிமையாளரான நடராஜன் (80) உரிமை கோரி வந்துள்ளார். இளங்கோவனின் மாமனாரான, விவேகானந்தர் நகரை சேர்ந்த பழனிச்சாமி (74), ராமபட்டினம் புதூரை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி (57) உள்ளிட்ட சிலர் பிரச்னைக்குரிய காலியிடத்திற்கு வேலி அமைக்கும் பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர்.