மான்டிவிடியோ: உருகுவே கால்பந்து நட்சத்திரம் லூயிஸ் சுவாரெசுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.உருகுவே தேசிய கால்பந்து அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமைக்குரியவர் சுவாரெஸ் (33). தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான உலக கோப்பை தகுதிச் சுற்றில் உருகுவே-பிரேசில் அணிகள் இன்று மோத உள்ள நிலையில், வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. அதில் சுவாரெசுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கோல்கீப்பர் முனோஸ் (38) செய்து கொண்ட சோதனையிலும் தொற்று இருப்பது தெரிந்தது. அதனால் உடனடியாக இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இதனை உறுதி செய்த உருகுவே கால்பந்து சங்கம், ‘கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள வீரர்கள் இருவரும் நல்ல ஆரோக்கியமாக இருக்கின்றனர்’ என்று தெரிவித்துள்ளது.