ஊட்டி: ஊட்டி அருகேயுள்ள மசக்கல் கிராமத்தில் குடிநீர் கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மசக்கல் கிராமத்து மக்களின் உபயோகத்திற்காக கக்குச்சி ஊராட்சி நிர்வாகம் குடிநீர் கிணறு ஒன்று அப்பகுதியில் அமைத்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக கிராமத்திற்குள் குடிநீர் வராததை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் கிணறு அருகே சென்று பார்த்தனர். அப்போது கிணற்றுக்குள் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்கு வனத்துறையினர் சென்று சிறுத்தையை மீட்டனர்.