தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம் மின்தேவை புதிய உச்சமாக 20,830 மெகாவாட் பதிவு: மின்வாரியம் தகவல்

சென்னை: தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியது முதல் வெப்பம் அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் 22ம் தேதி 19,407 மெகாவாட் மின் தேவை பதிவானது. ஏப்ரலில் அதிகபட்ச மின் தேவை 19,900 மெகாவாட் இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் ஏப்.8ம் தேதி 20,125 மெ.வாட் மின் தேவை பதிவானது, தொடர்ந்து ஏப்.18ம் தேதி 20,341 மெ.வாட், ஏப்.26ம் தேதி 20,583 மெ.வாட், ஏப்.30ம் தேதி 20,701 மெகாவாட் என்ற அளவுகளில் மின் தேவை பதிவானது.

இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்த அளவுகளையும் கடந்து மின் தேவை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் (மே 2ம் தேதி) மின் தேவை 20,830 மெகாவாட்டாக பதிவானது. இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்ட டிவிட்டர் பதிவு:  வெப்ப அலையின் ஊடே கடந்த மே 2ம் தேதி மாநிலத்தின் மின் தேவை 20830 மெகாவாட் (3-3.30 மணி) என புதிய உச்சத்தை எட்டியது. இதற்கு முந்தைய அதிகபட்ச மின் தேவை கடந்த ஏப்.30ம் தேதி 20701 மெகாவாட் ஆகும். நம்பகமான மின்சார வழங்கலை உறுதி செய்து வருகிறது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகி்ர்மான கழகம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம் மின்தேவை புதிய உச்சமாக 20,830 மெகாவாட் பதிவு: மின்வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: