பவானிசாகர் அணை நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானைகள்

சத்தியமங்கலம்:  சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கப்பகுதியை அதை ஒட்டி அமைந்துள்ள வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள் அவ்வப்போது அணையில் தேங்கியுள்ள தண்ணீரை குடிப்பதற்காக கூட்டம் கூட்டமாக வருவது வழக்கம். நேற்று மாலை வனப்பகுதியைவிட்டு வெளியேறிய 2 குட்டிகளுடன் கூடிய 5 யானைகள் பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதிக்கு வந்தன.

அணையில் தேங்கியுள்ள நீரில் இறங்கிய காட்டு யானைகள் தனது தும்பிக்கையால் நீரை உறிஞ்சி குடித்ததோடு தண்ணீருக்குள் இறங்கி சிறிது நேரம் விளையாடி மகிழ்ந்தன.

சுமார் அரை மணி நேரம் தண்ணீரில் விளையாடிய காட்டு யானைகள் பின்னர் மீண்டும் அணையின் மேல் பகுதியில் உள்ள தார் சாலையை கடந்து காராச்சிக்கொரை வனப்பகுதிக்குள் சென்றன. பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை மேய்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: