2, 3ம் கட்ட பரிசோதனைக்காக ரஷ்ய தடுப்பூசி இந்தியா வருகை: 180 தன்னார்வலர்கள் முன்பதிவு

கான்பூர்: ரஷ்யா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியான, ‘ஸ்பூட்னிக் வி’, மனிதர்களுக்கு 2 மற்றும் 3ம் கட்டமாக கொடுத்து பரிசோதிப்பதற்காக அடுத்த வாரம் இந்தியா வந்து சேர்கிறது.உலகிலேயே முதல் நாடாக, கொரோனா தடுப்பூசியை வெற்றிகரமாக தயாரித்து விட்டதாக  கடந்த ஆகஸ்ட்டில் ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

‘ஸ்பூட்னிக் வி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை, தனது நாட்டில் 3 கட்டங்களாக மனிதர்களுக்கு கொடுத்து வெற்றிகரமாக பரிசோதித்து விட்டதாகவும் அதன் அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தார். இந்தியாவில் இந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்த பரிசோதிக்கவும், நாடு முழுவதும் விநியோகிக்கவும், ரஷ்யா நிறுவனங்களுடன் டாக்டர் ரெட்டி பரிசோதனை நிலையம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக, இந்த மருந்தை ரஷ்யாவிடம் இருந்து பெறுவதற்கான அனுமதியை கோரி, தேசிய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பிடம் அது விண்ணப்பித்தது. அதற்கான அனுமதியை தற்போது அதற்கு கிடைத்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக, கான்பூரில் உள்ள. ‘கணேஷ் சங்கர் வித்யார்த்தி மருத்துவ கல்லூரி’க்கு, அடுத்த வாரம் ‘ஸ்யூட்டினிக் வி’ மருந்து வந்து சேர்கிறது.

அதன் பிறகு, மனிதர்களுக்கு இது அளிக்கப்பட்டு, 2 மற்றும் 3ம் கட்ட பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளன. ஆனால், முதல் கட்ட பரிசோதனை எப்போது நடத்தப்பட்டது என்ற விவரத்தை டாக்டர் ரெட்டி நிறுவனம் கூறவில்லை.இது தொடர்பாக டாக்டர் ரெட்டி நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் கூறுகயைில், ‘‘‘ஸ்யூட்னிக் வி பரிசோதனைக்காக 180 தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். இங்கு 2, 3ம் கட்ட பரிசோதனைகள் நடைபெறும். மருந்து செலுத்தப்பட்ட பிறகு, அதன் விளைவுகளை  தெரிந்து கொள்வதற்காக, தன்னார்வலர்கள்  7 மாதங்கள் கண்காணிப்பில் இருப்பார்கள். பின்விளைவுகள் இல்லாமல் அவர்களின் உடல்நிலை சீராக இருக்கும்பட்சத்தில், 21 நாட்கள் இடைவெளியில் மீண்டும் அவர்களுக்கு 2 அல்லது 3 முறை தடுப்பூசி வழங்கப்படும்,’’ என்றனர்.

பலி எண்ணிக்கை 1.30 லட்சத்தை நெருங்குகிறது

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 88 லட்சமாக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:

* கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,100 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதன்மூலம், நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 88 லட்சத்து 14 ஆயிரத்து 579 ஆக உயர்ந்துள்ளது.

* கடந்த 24 மணி நேரத்தில் 447 நோயாளிகள் கொரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழப்பு 1 லட்சத்து 29 ஆயிரத்து 635 ஆக உயர்ந்துள்ளது.

* சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 5ம் நாளாக 5 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. தற்போது, 4 லட்சத்து 79 ஆயிரத்து 216 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: