திருப்புவனம்: அகரத்தில் அகழாய்வு குழிகள் மூடப்பட்டதுடன், கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு முழுமையாக நிறைவடைந்தது. 7ம் கட்ட அகழாய்வு பணியில் ஜனவரியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 6ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை ரூ.40 லட்சம் செலவில் கடந்த பிப்.19ம் தேதி துவங்கியது. தமிழக தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் மண்டல உதவி இயக்குனர் சக்திவேல், தொல்லியல் அலுவலர்கள் ஆசைத்தம்பி, பாஸ்கரன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டனர். கீழடியில் 20 குழிகள் தோண்டப்பட்டு 1,400 பொருட்களும், கொந்தகையில் 42 குழிகள் தோண்டப்பட்டு 29 முதுமக்கள் தாழிகளில் 20 எலும்பு கூடுகளும், அகரத்தில் 9 குழிகள் தோண்டப்பட்டு 1,020 பொருட்கள், மணலூரில் 9 குழிகள் தோண்டப்பட்டு 39 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகள், இணைப்பு பானைகள், பானை ஓடுகள், கருப்பு சிவப்பு பானைகள், தரைதளம் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன.