உலக கோப்பை டி20 தொடரை பாதுகாப்பாக நடத்த முயற்சிப்போம்…ஜெய் ஷா உறுதி

துபாய்: ஐசிசி உலக கோப்பை டி20 தொடரை அடுத்த ஆண்டு இந்தியாவில் பாதுகாப்பாக நடத்தி முடிப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்று கிரிக்கெட் வாரிய செயலர் ஜெய் ஷா கூறியுள்ளார். இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் அக்டோபர்  நவம்பர் மாதங்களில் நடைபெறுவதாக இருந்த உலக கோப்பை டி20 தொடர், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 2022ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே திட்டமிட்டபடி, 2021ல் (அக்.  நவ.) உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடத்தப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று பிரச்னை இன்னும் முழுவதுமாக முடிவுக்கு வராத நிலையில், இந்த தொடர் நடப்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்த நிலையில், இது குறித்து பிசிசிஐ செயலர் ஜெய் ஷா துபாயில் நேற்று கூறியதாவது: உலக கோப்பையில் பங்கேற்பதற்காக இந்தியா வரும் 15 அணிகளின் வீரர்கள் மற்றும் நிர்வாகிகள், ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இதில் எந்தவித சமரசமும் செய்யப்படாது. இதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். இந்தியர்களின் விருந்தோம்பல் சிறப்பை அனைவரும் உணர்ந்துகொள்ளும் வகையில் எங்களின் வரவேற்பும், வசதிகளும் இருக்கும். நெருக்கடியான இந்த காலகட்டத்தில் எந்த வித சவாலையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கிறோம். சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவதுடன், புதுமைகளை புகுத்தவும் முயற்சிப்போம்.

Related Stories: