பாட்னா: பீகாரில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேற வேண்டும் என்றும் தேஜஸ்வி யாதவ் முதலமைச்சராக ஆதரவு தர வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜ.க இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணி மட்டுமின்றி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்த ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி தனியாகவும், ராஷ்டிரீய லோக் சமதா கட்சி தலைமையில் ஒரு அணியாகவும் போட்டியிட்டன. இதையடுத்து, நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க. கூட்டணி, 125 இடங்களில் வெற்றி கண்டுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி 110 இடங்களை கைப்பற்றியது.