நெல்லை : நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் அருந்ததிராய் புத்தகம் நீக்கப்பட்டுள்ளது.எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான அருந்ததிராயின் Walking With The Comrades புத்தகம் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டது. ஆனால் இதற்கு பாஜகவின் மாணவர் அமைப்பான ABVP எதிர்ப்பையடுத்து எம்.ஏ.ஆங்கில இலக்கிய பாடத்திட்டத்தில் புத்தகம் நீக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் அருந்ததிராய் மாவோயிஸ்ட், நக்சலைட்டுகளின் பகுதிகளுக்கு சென்ற அனுபவம் குறித்து எழுதியிருந்தார்.இந்நிலையில் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து பல்கலை. குழுவின் முடிவுப்படி அருந்ததிராயின் புத்தகம் நீக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் பிச்சுமணி தெரிவித்துள்ளார். 4 வருடமாக இருந்த பாடம் நான்கே நாட்களில் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அருந்ததிராயின் புத்தகத்திற்கு பதிலாக எழுத்தாளர் கிருஷ்ணனின் My Native Land என்ற புத்தகம் சேர்க்கப்பட்டுள்ளது.