மதுரை: குற்ற செயல்களில் ஈடுபடுவோர் வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை பயன்படுத்துவதால், வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை ஏன்? ஒட்டுமொத்தமாக தடை விதிக்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது. சட்டக்கல்லூரி மாணவர்கள் வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை பயன்படுத்துவதை தடுக்ககோரிய வழக்கில் இத்தகைய கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மதுரையில் 50 சதவீத வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டி சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கஞ்சா விற்பனையாளர்கள், ரவுடிகள் ஆகியோர் காவல்துறையிடம் இருந்து தப்பி செல்ல வாய்ப்பாக அமைகிறது. இத்தகைய வழக்கறிஞர் ஸ்டிக்கர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது. இருசக்கர வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் குறித்து பார்கவுன்சில் உறுப்பினர், மூத்த வழக்கறிஞர்கள் வாகனங்களை நிறுத்தி சோதனையிடும் போது, தாங்கள் சட்டக்கல்லூரி மாணவர்கள் என பதிலளிக்கின்றனர். மேலும் மற்ற மாநிலங்களில் அதிகளவிலான சட்டக்கல்லூரிகள் உருவாக தொடங்கிவிட்டன.