ஹைதாபாத் : உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது புகார் கூறி கடிதம் எழுதிய விவகாரத்தில் ஆதாரம் இல்லை எனில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் எழுதியுள்ள கடிதத்தில், நீதிமன்றத்தின் மாண்பை குலைக்கும் வகையில், கூறப்பட்ட புகார்கள் நீதித்துறை மீது மக்களை நம்பிக்கை இழக்கச் செய்யும் என்று தெரிவித்துள்ளனர். இதே போன்று ஏற்கனவே மூத்த வழக்கறிஞர் சுனில் குமார், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில், ஜெகன் மோகன் ரெட்டி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.