நெம்மாரா- நெல்லியாம்பதி மலைப்பாதையில் அடிக்கடி முகாமிடும் யானைகள்: சுற்றுலா பயணிகள் அச்சம்

பாலக்காடு: பாலக்காடு அருகேயுள்ள நெம்மாரா- நெல்லியாம்பதி மலைப்பாதையில் காட்டு யானைகள் அடிக்கடி முகாமிடுவதால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் அச்சம் அடைந்துள்ளனர். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நெல்லியாம்பதி டீ, காபி, மிளகு, ஆரஞ்சு, ரப்பர் உள்ளிட்ட தோட்டப்பயிர்கள் விளைச்சல் அதிகளவு உள்ள இடம். இதனால் ஏராளமான தொழிலாளர்கள் இப்பகுதியில் வசித்து வருகிறார்கள். இவர்கள் தினமும் வந்து செல்லும் சாலைகளில் அடிக்கடி காட்டுயானைகள் குட்டியுடன் முகாமிடுவதால் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

நெம்மாராவில் இருந்து நெல்லியாம்பதி செல்லும் வழித்தடத்தில் போத்துண்டி அணையை அடுத்துள்ள கொண்டைஊசி வளைவு சாலைகளான செருநெல்லி எஸ்டேட், ஐயப்பன்திட்டு ஆகிய இடங்களில் குட்டி யானையுடன் 4 காட்டு யானைகள் சாலைகளில் முகாமிட்டு நிற்பதால் நெம்மாரா- போத்துண்டி- நெல்லியாம்பதி சாலையில் அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதனால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலாப்பயணிகளும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

Related Stories: