அரசுமருத்துவமனை 3வது மாடியில் இருந்து குதித்து கொரோனா நோயாளி தற்கொலை

மதுரை: மதுரை, பீ.பி.குளத்தை சேர்ந்தவர் மனோகரன் (53). டூவீலர் மெக்கானிக். கடந்த வாரம் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 3 நாட்களுக்கு முன் நடந்த  பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவரை கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றினர். நேற்று  முன்தினம் இரவு மனைவியை வீட்டிற்கு அனுப்பி விட்டு தனியாக இருந்துள்ளார். நேற்று காலை மனைவி திரும்பி வந்தபோது வார்டில் அவரை  காணாமல் அதிர்ச்சி அடைந்தார். மருத்துவமனை முழுவதும் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

காவலாளிகள் மருத்துவமனை பின்பகுதியில் தேடியபோது, அங்கு மனோகரன் இறந்து கிடந்தது தெரிந்தது. தகவலறிந்து தல்லாகுளம் போலீசார்,  மனோகரனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘மனோகரன் 3வது மாடியில்  இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். கொரோனா பாதிக்கப்பட்டதை  அறிந்ததும் மேலும் விரக்தியடைந்த அவர், தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்.  வேறு காரணங்கள் உள்ளதா என்பது குறித்தும் விசாரித்து  வருகிறோம்’ என்றனர்.

Related Stories: