மன்னார்குடி: மன்னார்குடி தாமரைக்குளம் பகுதியில் கடந்த மே மாதம் அழிந்து வரும் அரிய வகை இனமான மரநாய் ஒன்று 3 குட்டிகள் ஈன்று விட்டு இறந்து விட்டது. தாய் இறந்ததை அறியாத பச்சிளம் குட்டிகள் தாயின் மார்பில் பால் குடிக்க முயன்றது. ஒரு கட்டத்தில் பால் கிடைக்காமல் மூன்று மரநாய் குட்டிகளும் வித்தியாசமான முறையில் குரல் எழுப்பி அழுததை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் மூன்று மரநாய் குட்டிகளையும் பத்திரமாக மீட்டு மன்னார்குடி வனத்துறை அலுவல கத்திற்கு கொண்டு சென்று அங்கு வனச்சரக அலுவலர் ஜெயச்சந்திரனிடம் ஒப்படைத்தனர். தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் அறிவொளி தாயின்றி தவித்த மரநாய் குட்டிகளை பத்திரமாக பாதுகாக்குமாறு வனத்துறையினருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து இரும்பு குண்டு ஒன்றினை தயார் செய்த வனத்துறையினர் அதில் மரநாய் குட்டிகளையும் பாதுகாப்பாக வளர்த்து வந்தனர். அவ்வப்போது கால்நடை மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சையும் அளித்தனர்.