சண்டிகர்: பஞ்சாப் சட்டப்பேரவையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வகையில் 4 மசோதாக்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் ஆரம்பத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு நிலவி வந்தது. இதற்கிடையே, மத்திய அரசின் வேளாண் சட்டங்களை நீர்த்து போக செய்யும்படியாக, மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டு சட்டங்களை நிறைவேற்றும்படி காங்கிரஸ் முதல்வர்களுக்கு அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆலோசனை வழங்கினார். அதன்படி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, மத்திய அரசின் சட்டங்களை தடுத்து நிறுத்தும் வகையிலான மசோதாக்களை நிறைவேற்ற சிறப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு ஏற்பாடு செய்தது. கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று முன்தினம் அமளி காரணமாக மசோதா தாக்கல் செய்யப்படவில்லை.