தர்மபுரி அருகே இதயக்கோளாறுக்கு பெருச்சாளியை சமைத்து சாப்பிட்ட பெண் சாவு

தர்மபுரி: தர்மபுரி அருகே பெருச்சாளியை சமைத்து காப்பிட்ட இளம்பெண் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே மூலக்காடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். விவசாயி. இவரது மனைவி சரிகா (30). இவர்களுக்கு, 8 வயதில் ஒரு மகள் உண்டு. இந்நிலையில், சரிகா கடந்த 5 ஆண்டுகளாக இதய கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு சிகிச்சை பெற்றும் பலனளிக்கவில்லை. இதையடுத்து, நாட்டு வைத்தியம் பார்த்து வந்த அவரை ஒரு சிலர், பெருச்சாளி சாப்பிட்டு வந்தால் குணமாகும் எனக்கூறி உள்ளனர். இதனை நம்பிய, சரிகா பெருச்சாளியை சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 17ம் தேதி வீட்டின் அருகே மயக்க நிலையில் பெருச்சாளி ஒன்று கிடந்தது. அதனை பிடித்து, சரிகா சமைத்து சாப்பிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து மாலை 6 மணியளவில் திடீரென அவர் மயங்கி விழுந்தார். அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு தொப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு உடல் நிலை மோசமானதால், மேல் சிகிச்சைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, தொப்பூர் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். விஷம் தின்று மயங்கிய பெருச்சாளியை சாப்பிட்டதால் சரிகா இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Related Stories: