திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் திட்ட காலம் முடிந்தும் ரயில்வே மேம்பால பணிகள் இழுபறியாகி வருகிறது. திருவள்ளூர் - பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள கடம்பத்தூரில் ரூ.14.5 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது. அதில், நெடுஞ்சாலை பகுதியில் 25 பில்லர்கள், ரயில்வே பகுதியில் நான்கு பில்லர்கள் என மொத்தம் 29 பில்லர்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கின.
இந்நிலையில், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முதல் ரயில்வே கேட் வரை பில்லர்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தது. இதேபோல், கசவநல்லாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகிலிருந்து துவங்கப்பட்ட மேம்பால பணிகள் ரயில்வே கேட் வரை நிறைவடைந்துள்ளது. இருபுறமும் உள்ள ரயில்வே கேட்களின் இடையே உள்ள ரயில்வே பகுதியில் பாலத்துக்கான பில்லர் அமைக்கும் பணி நடைபெறாமல் நிலுவையில் உள்ளது.