தூர்வாரும் பணியின்போது மழைஅறிகுறி எதிரொலி; வேதாமிர்த ஏரியில் ஒரே நேரத்தில் குவிந்த டிராக்டர், பொக்லைன்கள்: வேதாரண்யத்தில் பரபரப்பு

வேதாரண்யம்: வேதாரண்யம் வேதாமிர்த ஏரியில் தூர்வாரும்பணியின்போது மழைமேகம் திரண்டதால் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான டிராக்டர்கள், பொக்லைன் இயந்திரம் பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகை மாவட்டம் வேதாரண்யம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வேதாமிர்த ஏரி. இந்த ஏரி 17 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற முக்கிய புனித நாட்களில் கடலில் புனித நீராடிவிட்டு இந்த ஏரியிலும் புனித நீராடி மூதாதையர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவார்கள். நாள்தோறும் இந்த ஏரியில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குளிப்பதற்கு இந்த ஏரியை பயன்படுத்துகிறார்கள். இந்த ஏரி மழைநீரை கொண்டு மட்டுமே நிரம்புகிறது.

அதிக மழை காலங்களில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர் இந்த ஏரிக்கு வந்தடைந்து நிரம்புகிறது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கும், புனித நீராடவும் பயன்படும் ஏரி தூர்ந்து வெகு விரைவில் தண்ணீர் குறைந்து விடுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜசோழன் காலத்தில் வெட்டப்பட்ட இந்த ஏரி அவ்வப்போது தூர்வாரினாலும் தற்போது 70 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக தூர்வாரப்படுகிறது. சுமார் ரூ.6 கோடி நிதியில் தூர் வாரும்பணி மற்றும் சுற்றுச்சுவர் அமைத்தல், பொதுமக்கள் நடைபயிற்சிக்கும், பொழுதுபோக்கு பூங்காக்களும் அமைக்கப்படும் பணி நகராட்சி மூலம் நடைபெற்று வருகிறது.

தூர்வாரும் பணியில் கடந்த ஒரு வரமாக நாள்தோறும் 10க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள், 100க்கும் மேற்பட்ட டிராக்டர் மூலம் சேறு மணல் அள்ளப்படுகிறது. இப்பணியினை தமிழக ஜவுளிதுறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நாகை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கிரிதரன், நகராட்சி ஆணையர் பிரதான்பாபு, முன்னாள் எம்.பி பி.வி ராஜேந்திரன், வழக்கறிஞர் நமசிவாயம், நகர மன்ற முன்னாள் துணைத் தலைவர் சுரேஷ்பாபு, மாவட்ட கவுன்சிலர்கள் சுப்பையன், திலீபன் ஆகியோர் பார்வையிட்டு விரைந்து பணிகள் முடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மதியம் வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதியில் மழைக்கான கருமேகங்கள் திரண்டு ஆங்காங்கே மழை பெய்தது. ஏரி தூர்வாரும்பணிக்கு மழை இடையூறாக இருக்கும் என நினைத்து விரைந்து பணிகளை முடிக்க மணல் அள்ளுவதற்கு நூற்றுக்கணக்கான டாக்டர்கள் ஏரியில் குவிந்தன. அதிவேகத்தில் பொக்லைன் இயந்திரம் கொண்டு பணி மும்மரமாக நடைபெற்றன. சுமார் 300க்கும் மேற்பட்ட டாக்டர்கள் ஒரே நேரத்தில் ஏரியில் குவிந்ததால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இதனை நூற்றுக்கணக்கான மக்கள் கரையோரம் நின்று வேடிக்கை பார்த்தனர். சேற்றை அள்ளிய டிராக்டர் விரைந்து சாலைகளில் சென்றதால்சாலையில் சேறு கொட்டியது. சாலையில் கிடந்த சேற்றுமணலால் போக்குவரத்துக்கு இடையூறாக ஏற்படும் என்பதால் உடனடியாக டோசர் வைத்து சுத்தம் செய்யும் பணியும் மேற்கொண்டனர். வேதா அமிர்த ஏரிக்கரையில் ஒரே நேரத்தில் மழை வருவதற்குள் சேற்றை அள்ளுவதற்காக நூற்றுக்கணக்கான டிராக்டர்கள், பொக்லைன் இயக்கப்பட்டதால் அப்பகுதியே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: