தொடர் கொள்ளை 2 வாலிபர் கைது

திருநின்றவூர்: திருநின்றவூர், பட்டாபிராம், முத்தாபுதுப்பேட்டை ஆகிய பகுதிகளில் வீடு உடைத்து கொள்ளை நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. பட்டாபிராம் போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன், திருநின்றவூர் இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்நிலையில், நேற்று திருநின்றவூர் திருமுருகன் நகர் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் மாரிமுத்து என்பவரை 2 வாலிபர்கள் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ₹500யை பறித்து சென்றனர். தகவலறிந்த போலீசார் இருவரையும் சுற்றிவளைத்து பிடித்து திருநின்றவூர் காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில், பெரம்பூரை சேர்ந்த மணிகண்டன்(22) மற்றும் லாரன்ஸ்(21)  என தெரியவந்தது. இருவரும், பட்டாபிராம் சரகபகுதிகளில் வீடுகளை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்து 15 சவரன் 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories: