வி.கே.புரம்: கல்லிடைக்குறிச்சி அருகே வனப்பகுதியில் சுற்றித்திரிந்த நோயுற்ற கர்ப்பிணி யானை வனத்துறையின் அலட்சியத்தால் நேற்று தனியார் தோட்டத்தில் இறந்து கிடந்தது. நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் கடந்த சில நாட்களாக நோயுற்ற யானை ஒன்று சுற்றி வந்தது. நேற்று முன்தினம் கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் மலையடிவாரத்தில் உள்ள 80 அடி கால்வாய் பகுதியில் அந்த யானை நடமாட்டம் காணப்பட்டது. உடல் மெலிந்த நிலையில் நடக்க முடியாமல் சோர்ந்து அடிக்கடி ஆங்காங்கே படுத்து இளைப்பாறியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் வனத்துறையினர் யானையை மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் நேற்று காலை மலைப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் அந்த யானை இறந்து கிடந்தது. தகவலறிந்து வனத்துறையினர் விரைந்து சென்று யானையின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு மணிமுத்தாறு வனப்பகுதியில் யானை உடல் அடக்கம் செய்யப்பட்டது.