ஊட்டி: ஊட்டி மான் பூங்காவில் கடமான்களை வனப்பகுதிக்குள் விடுவிப்பதற்கு அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அதற்கான பணிகளில் வனத்துறையினர் துவக்கியுள்ளனர். ஊட்டி ஏரியின் மறு கரையில் மான் பூங்கா உள்ளது. இப்பூங்கா முதுமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பூங்கா கடந்த 1995ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த பூங்காவில் புள்ளிமான், சாம்பார் வகை மான்கள் பராமரிக்கப்பட்டு வந்தன. இவற்றை காண சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. தொடர்ந்து புள்ளி மான்கள் நோய்வாய்பட்ட நிலையில் அவை முதுமலைக்கு கொண்டு செல்லப்பட்டன. தற்போது இங்கு சாம்பார் டீர் எனப்படும் கடமான்கள் மட்டுமே உள்ளன. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பூங்காவில் மத்திய உயிரியல் பூங்கா ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆணைய விதிமுறைகள்படி பூங்காவில் மான்கள் வாழ்வதற்கு ஏற்ற தரமான சூழல் இல்லை என தெரிவித்தனர். இதனால் கடந்த 5 ஆண்டுகளுகாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. கடந்த 2017ம் ஆண்டில் இங்கு 19 கடமான்கள் இருந்தன. தற்போது உடல்நல குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக இறந்ததால் அவற்றின் எண்ணிக்கை 14 ஆக குறைந்துள்ளது. மத்திய உயிரியல் ஆணையத்தின் கடுமையான விதிமுறைகளை பின்பற்ற முடியாத நிலையில் இங்குள்ள கடமான்களை இடமாற்றம் செய்யவும் முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிக்கை வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது.