சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட பல மாவட்டத்தில் 14 நிறுவனங்கள் மூலம் ரூ.10,055 கோடியில் முதலீடு: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில், தொழில்துறை சார்பில் சென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், திருப்பூர், திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 14 தொழில் நிறுவனங்கள் தங்கள் புதிய முதலீட்டுத் திட்டங்களை 10,055 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இத்திட்டங்களின் மூலம், சுமார் 7,000 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் பயனாக, இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் ஆறு மாதங்களில் இந்திய அளவில் மிக அதிக முதலீடுகளை ஈர்த்த முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

2020ம் ஆண்டு செப்டம்பர் வரை, 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 31,464 கோடி ரூபாய் முதலீடுகளுக்கு கையெழுத்திடப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, 14 புதிய தொழில் திட்டங்களை, தமிழ்நாட்டில் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன. மொத்தம், 14 திட்டங்களின் மூலம், தமிழ்நாட்டிற்கு 10,055 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, சுமார் 7,000 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.சி. சம்பத், தலைமைச் செயலாளர் க.சண்முகம், தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர் நீரஜ் மித்தல், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: