காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண் வீட்டு முன்பு நிறுத்திய பைக் எரிப்பு: வாலிபர் கைது

பெரம்பூர்: காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த பைக்கை தீவைத்து எரித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.அயனாவரம் ஏழுமலை தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (30). இவரது தங்கையை அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி தெருவை சேர்ந்த தஸ்தாகீர்  பாஷா (30) கடந்த சில நாட்களாக பின் தொடர்ந்து, காதலிப்பதாக கூறியுள்ளார். இதை அந்த இளம்பெண் ஏற்காததால், ‘நீ என்னை காதலித்தே ஆகவேண்டும்,’ என மிரட்டியுள்ளார். இதுகுறித்து அந்த இளம்பெண் தனது பெற்றோரிடம்  தெரிவித்தார். அவர்கள் இதுகுறித்து அயனாவரம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், தஸ்தாகீர் பாஷாவை அழைத்து, எச்சரித்து  அனுப்பி உள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் அந்த இளம்பெண்ணை சந்தித்த தஸ்தாகீர் பாஷா, தனது காதலை ஏற்கும்படி கூறியுள்ளார். ஆத்திரமடைந்த  அந்த இளம்பெண், அவரை கண்டித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு மது போதையில் அந்த இளம்பெண் வீட்டிற்கு சென்ற தஸ்தாகீர் பாஷா, வீட்டின் வெளியே நிறுத்தி இருந்த  விலை உயர்ந்த பைக்கை தீவைத்து எரித்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில்  அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தஸ்தாகீர் பாஷாவை கைது சிறையில் அடைத்தனர்.

Related Stories: