சென்னை: பழவேற்காடு ஏரியை ரூ.26.85 கோடி மதிப்பீட்டில் தூர்வாரி சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும், என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு ஏரியில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் மணல் திட்டு ஏற்பட்டு முகத்துவாரம் தூர்ந்து விடுகிறது. இதனால் இப்பகுதி மீனவர்கள் வங்கக்கடலில் சென்று மீன்பிடி தொழில் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக ஏரியின் முகத்துவாரத்தை தூர்வாரி, நேர்கல் சுவர்கள் மூலம் நிலைப்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.