டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பஞ்சாப், அரியானா மாநிலங்களில் டிராக்டர் பேரணியை கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடத்தினார். அப்போது மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக சாடி ராகுல் காந்தி பேசினார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ‘ராகுல் காந்தி டிராக்டரில் மெத்தையில் அமர்ந்து கொண்டு ஊர் சுற்றி வருகிறார். அவருக்கு விவசாயம் பற்றி எதுவுமே தெரியாது. வெங்காயம் விளைவது மண்ணுக்கு அடியிலா? அல்லது வெளியிலா? என்பது கூட ராகுல் காந்திக்கு தெரியாது’ என்று சாடினார்.