10 கோடி பேரின் பசியை போக்கும் உலக உணவு அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு: 58 ஆண்டு கால சேவைக்கு அங்கீகாரம்

ஓஸ்லோ: உலகம் முழுவதும் 83 நாடுகளில் 10 கோடி பேரின் பசியை போக்கும் ஐநா.வின் உலக உணவு திட்ட அமைப்பிற்கு இந்தாண்டுக்கான  அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.மருத்துவம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்தவர்களுக்கு இந்தாண்டுக்கான நோபல் பரிசு  அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நேற்று வெளியிடப்படுவதாக  அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில், உலக சுகாதார அமைப்புக்கோ அல்லது பருவநிலை தொடர்பான போராட்டங்களில் முன்னிலை வகித்து போராடி  வரும் சுவீடனின் பள்ளி மாணவி கிரெட்டா துன்பெர்க்கோ வழங்கப்பட அதிகம் வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.  

இதனால், ஒவ்வொரு ஆண்டும் அதிக முக்கியத்துவம் பெரும் அமைதிக்கான நோபல் பரிசு, இம்முறையும் யாருக்கு கிடைக்கும் என்பது பெரும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு, ஐநா.வின் அங்கமான உலக உணவு திட்ட அமைப்புக்கு  அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் ரோம் நகரை தலைமையிடமாக கொண்டு 58 ஆண்டாக இந்த அமைப்பு செயல்படுகிறது.இதன் முக்கிய நோக்கம் உலக மக்களின் பசியை போக்குவது மட்டுமே. இந்த அணைப்பு, ஒவ்வொரு ஆண்டும் 83 நாடுகளில் 10 கோடிக்கும் மேலான  சிறுவர், சிறுமியர், பெரியவர்களுக்கு உணவளித்து வருகிறது. குறிப்பாக, கொரோனா காலகட்டத்தில் பசி வேதனை அதிகரித்த நிலையில், பலரது  பசிக்கு உணவளித்த உலக உணவு திட்டம் அமைதி நீடிக்க முக்கிய காரணியாக இருந்துள்ளது. இதற்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதாக  தேர்வாளர்கள் அறிவித்தனர்.

* நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட மகிழ்ச்சியை உணவு திட்ட நிர்வாக இயக்குநர் டேவிட் பீஸ்லே உள்ளிட்ட நிர்வாகிகள் கொண்டாடுகின்றனர்.

* 211 தனிநபர்கள், 107 அமைப்புகள் அமைதிக்கான நோபல் விருதுக்காக இந்தாண்டு 211 தனிநபர்களும், 107 அமைப்புகளும் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தன.

* அமைதிக்கான நோபல் பரிசு வரும் டிசம்பர் 10ம் தேதி ஓஸ்லோவில் வழங்கப்படும்.

* இதில் உலக உணவு திட்ட அமைப்பிற்கு தங்க பதக்கத்துடன், ரூ.8.25 கோடி பரிசாக வழங்கப்படும்.

ஏமாந்தார் டிரம்ப்

அமைதிக்கான நோபல் விருதுக்கான பரிந்துரையில், இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையே அமைதி  ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததற்காக, அமெரிக்க அதிபர் டிரம்பின் பெயரும் இடம் பெற்றது. ஆனால், அவருக்கு அந்த  அதிர்ஷ்டம் கிட்டவில்லை.

பியூஸ் கோயலுக்கு கூடுதல் பொறுப்பு

ராம்விலாஸ் பஸ்வான் உயிரிழந்ததை தொடர்ந்து, அவர் வகித்து வந்த உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் துறைகள், ரயில்வே அமைச்சர்  பியூஷ் கோயலிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடியின் பரிந்துரைப்படி, இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  நேற்று பிறப்பித்தார். பியூஷ் கோயலிடம் ஏற்கனவே வர்த்தகம் மற்றும் தொழில்துறையும் கூடுதலாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: